தெலுங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டம், தீகுல் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சுவாமி என்பவரின் மனைவி ஜோதி. இந்தத் தம்பதிக்கு ஒரு மகளும், ஹரிகிருஷ்ணா (3) என்ற மகனும் இருந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கீசரா அருகிலுள்ள செரியாலா பகுதிக்குக் குடிபெயர்ந்தனர்.
ஜோதிக்குத் திருமணத்திற்கு முன்பிருந்தே நவீன் என்ற நபருடன் பள்ளிப்பருவக் காதல் இருந்து வந்துள்ளது. கணவர் வேலைக்குச் சென்ற பிறகு, ஜோதி தனது கள்ளக்காதலனான நவீனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கடந்த 29-ஆம் தேதி சுவாமி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், ஜோதி நவீனை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது மகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்க, 3 வயது மகன் ஹரிகிருஷ்ணா வீட்டிற்குள் இருந்துள்ளான். ஜோதியும் நவீனும் உல்லாசமாக இருந்தபோது, குழந்தை ஹரிகிருஷ்ணா தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தான். தங்களின் உல்லாசத்திற்கு இடையூறாகக் குழந்தை அழுததால் ஆத்திரமடைந்த ஜோதி, மகனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த குழந்தை சுயநினைவை இழந்தது.
பதறிப்போன ஜோதி, நவீனுடன் சேர்ந்து குழந்தையை மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். எனினும், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாலையில் குழந்தையின் உடலுடன் வீடு திரும்பிய ஜோதி, வேலை முடிந்து வந்த கணவரிடம், “மகன் கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டான்” என்று கூறி நம்பவைத்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய சுவாமி, மகனின் உடலைத் தனது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தார்.
காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா:
சில நாட்களுக்குப் பிறகு சுவாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அங்கு இரத்தக் கறைகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் சந்தேகமடைந்த அவர், வீட்டின் அருகிலிருந்த குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் (CCTV) கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தார். அதில், தன் மகன் இறந்த அன்று ஜோதியின் கள்ளக்காதலன் நவீன் வீட்டிற்கு வந்து சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
உடனே சுவாமி, தன் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனைக் கொலை செய்திருக்கலாம் எனத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார், ஜோதியைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் மகனை அடித்துக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, ஜோதி மற்றும் நவீன் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


