நெதர்லாந்து நாட்டு இளவரசி கத்தரீனா-அமாலியா (22), அரச குடும்பத்தின் மூத்த மகள் மற்றும் அரியணையின் அடுத்த வாரிசு ஆவார். இரண்டாவது மகளான இளவரசி அலெக்ஸியா (20), கலை மற்றும் ஃபேஷன் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு, அமாலியாவிற்கு ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து வந்த கடத்தல் மிரட்டல் காரணமாக, அவர் தனது கல்லூரி விடுதி வாழ்க்கையைத் துறந்து அரண்மனைக்குத் திரும்ப வேண்டியிருந்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் ஒரு வருடம் ரகசியமாக ஸ்பெயினில் தங்கிப் படித்து வந்தார்.
இந்த நிலையில், இளவரசிகளைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியதாக 33 வயது வாலிபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஹேக் நகரில் கைது செய்யப்பட்ட அந்த வாலிபரிடமிருந்து அமாலியா, அலெக்ஸியா மற்றும் ‘இரத்தக் குளியல்’ ஆகிய வார்த்தைகள் எழுதப்பட்ட கையெழுத்துக் குறிப்பு ஒன்று கைப்பற்றப்பட்டது.
மேலும், அந்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரு கோடரிகளில் ‘அலெக்ஸியா’, ‘மொசாட்’ மற்றும் ‘சீக் ஹெய்ல்’ எனப் பொறிக்கப்பட்டிருந்தது. இதில் ‘சீக் ஹெய்ல்’ (Sieg Heil) என்பது, ஹிட்லரின் நாஜிப் படையினரால் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வாழ்த்து முழக்கமாகும்.
இளவரசிகளைக் கொலை செய்யும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

