அபு அலா
திருகோணமலை, குச்சவெளி பகுதியில் உள்ள பழைய பொலிஸ் நிலைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த இரும்புகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில், தொல்பொருள் திணைக்களத்தின் தற்காலிக ஊழியர்கள் இருவர் உட்பட நால்வர் சனிக்கிழமை (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய பொலிஸ் நிலையக் கட்டட வளாகத்தில் உள்ள இரும்புப் பொருட்களை, சிலர் பட்டா லொறி ஒன்றில் திருட்டுத்தனமாக ஏற்றிச் செல்வதாகக் குச்சவெளி பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், திருட்டில் ஈடுபட்ட நால்வரையும் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர். இவர்களிடமிருந்து திருடப்பட்ட இரும்புப் பொருட்களும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பட்டா லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை மற்றும் குச்சவெளிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேக நபர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


