அறுகம்பேவில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட ஆறு சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அறுகம்பே பகுதியில் தாக்குதல்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் கொழும்பில் உள்ள முக்கிய நிதித் தளங்களை புகைப்படம் எடுத்த சம்பவங்கள் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
“இதுவரை, நாங்கள் ஆறு நபர்களை கைது செய்துள்ளோம். மாலைதீவு பிரஜை மற்றும் ஐந்து இலங்கையர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இது என்ன வகையான திட்டம் அல்லது முயற்சி என்று எங்களால் இன்னும் சொல்ல முடியாது. ஏனெனில் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில் இருந்து அப்படி ஒரு முடிவுக்கு வர முடியாது. எனவே, தேவையற்ற தவறான விளக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்” என அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

