Last Updated:
ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லும் சரக்கு கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சீனாவுக்கான ஈரான் தூதர் தெரிவித்துள்ளார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக அமைதி மன்றக் கூட்டத்தில் உரையாற்றிய ஈரான் தூதர் அப்தோல்ரெஸா ரஹ்மானி ஃபஸ்லி (Abdolreza Rahmani Fazli), ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்திற்கான ‘புதிய ஏற்பாடுகள்’ தொடர்பாக ஓமனுடன் இணைந்து ஈரான் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
இந்த புதிய ஏற்பாடுகள், ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பதற்கான பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பது, கப்பல்களின் பயணத்தைக் கண்காணிப்பது, பெருமளவிலான கப்பல்களால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணை தங்களது பிராந்திய நீர்ப்பரப்பின் ஒரு பகுதியாக இருப்பதால், அந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு கண்டிப்பாக சேவைக் கட்டணம் வசூலிப்போம் என்று கூறிய அவர், கடினமான காலகட்டத்தில் தங்களுடன் துணை நின்ற நாடுகளுக்கும், நட்பு நாடுகளுக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே போரை முடிவுக்கு கொண்டுவர ஏற்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின்படி, வர்த்தகக் கப்பல்கள் 60 நாட்களுக்கு அந்த நீர்வழிப்பாதையைக் கட்டணமின்றி கடந்து செல்லும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது; அந்த காலத்திற்குப் பிறகு என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பதில் தெளிவு இல்லாமல் இருந்து வந்த நிலையில் ஈரான் தூதரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.


