தென் கொரிய தலைநகருக்கு அருகே இருக்கும் நகரம் அன்சியோங்கில். இங்கு பாலம் கட்டும் பணி நடைபெற்றுவந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், இரண்டு சீனர்கள், இரண்டு தென் கொரியர்கள் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். தேசிய மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.
இது தொடர்பாக வெளியான வீடியோவில், திடீரென சரிந்து விழும் அந்தப் பாலத்தால் அந்தப் பகுதி தூசுகளால் சூழப்பட்டிருக்கிறது. கட்டுமான தளத்தின் முக்கிய ஒப்பந்ததாரரான ஹூண்டாய் பொறியியல் நிறுவனம், “எங்கள் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தவர்களின் குடும்பத்திடமும், காயமடைந்தவர்களிடமும் நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்து வருகிறோம். காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.

