ஏதாவது அவசர தேவைக்கு உடனடி பணம் தேவையா? இதோ உங்களுக்காகவே இருக்கிறது சிறு தனிநபர் கடன் என்று அழைக்கப்படும் மினி லோன். இந்த வகை கடன்களுக்கு குறைவான ஆவணங்களே சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி நாம் கேட்ட தொகை விரைவாக கிடைப்பதோடு, செலுத்த வேண்டிய தவணை முறைகளும் எளிதாக இருக்கும். இந்தக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு, எவ்வாறு செயல்படுகிறது?, அதன் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஒருவரின் அவசர செலவுகளுக்கு உதவுவதே இந்த மினி லோனின் நோக்கமாகும். இந்த லோனை பெறுவதற்கு நீங்கள் எந்தவித அடமானமும் வைக்க வேண்டியதில்லை. உங்கள் அடையாளச் சான்று, வருமானச் சான்று, வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றை சமர்பித்தாலே போதும். இந்த சிறு கடனின் சிறப்பம்சம் என்னவென்றால், இதை நீங்கள் மருத்துவச் செலவுகள், வீடு பராமரிப்பு, சுற்றுலா, பொருட்கள் வாங்குவது என எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
இந்தக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய காலமும் மிகவும் எளிதானது. வழக்கமாக 12 மாதங்கள் முதல் 72 மாதங்கள் வரை இருக்கும். நீண்ட காலம் செலுத்துவதாக இருந்தால், இஎம்ஐ தொகை குறைவாக வரும். இது சிறு கடன் என்பதால், ரூ.5,000 முதல் சில லட்சங்கள் வரை கடனாக பெற்றுக்கொள்ளலாம்.
மினி லோன் பெறுவதற்கான தகுதிகள்:
அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் மாதாந்திர சம்பளம் பெறுபவர்களும், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், தொழிலதிபர்கள் போன்றோர்களும் இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது:
மாதாந்திர சம்பளம் பெறுபவர்களாக இருந்தால் 21 முதல் 60 வயது வரையிலும், சுய தொழில் செய்பவர்களாக இருந்தால் 23 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வருமானம்:
குறைந்தது ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை சம்பளம் பெறுபவர்களாக இருக்க வேண்டும். இதுவே சுய தொழில் செய்பவர்களாக இருந்தால் ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். முக்கியமாக உங்கள் சிபில் ஸ்கோர் 700-க்கு மேல் இருந்தால் விரைவாகவும், குறைந்த வட்டி விகிதத்திலும் கடன் கிடைக்கும்.
இதையும் படிக்க: Educational loan | வெளிநாட்டில் படிப்பதற்கான கல்விக் கடன்கள்… குறைவான வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகள்…!
சிறு தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
- சிறு தனிநபர் கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலிக்கு செல்லுங்கள்.
- உங்கள் வயது, வருமானம், வேலை விவரம், கடன் தொகை ஆகியவற்றை நிரப்பி, நீங்கள் இந்தக் கடனை பெற தகுதியுடையவரா என பரிசோதிக்கவும்.
- அதன் பின்னர் கடனுக்கான விண்ணப்பத்தை நிரப்பி, அதில் கேட்கப்படும் விவரங்கள் அனைத்தையும் முழுமையாக நிரப்புங்கள். அதோடு உங்களுக்கு தேவைப்படும் தொகை மற்றும் கடனை திருப்பி செலுத்தும் காலத்தையும் தேர்ந்தெடுங்கள்.
- இதற்கடுத்து உங்கள் புகைப்படங்கள், அடையாளச் சான்று, வருமானச் சான்று போன்ற ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோடு செய்யுங்கள்.
வங்கிகள் உங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து, சிபில் ஸ்கோர், வருமானச் சான்று மற்றும் திருப்பி செலுத்தும் திறன் நல்லபடியாக இருந்தால் உடனடியாக கடன் தொகையை தருவார்கள்.
March 18, 2025 5:13 PM IST


