Last Updated:
பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே மாணவர்களுக்குத் தேவையான விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கவும், பள்ளிகளில் தேவையான தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்குப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளோ அல்லது வேறு எந்தவிதமான வகுப்புகளோ கட்டாயம் நடத்தப்படக் கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை கடுமையான உத்தரவை பிறப்பித்திருந்தது.
முன்னதாக, மே 31-ஆம் தேதி வரை மட்டுமே கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்ததால், ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில், புதுச்சேரியில் வரும் ஜூன் 4-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழகத்திலும் ஜூன் 4-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மற்றும் பல்வேறு நிர்வாகக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் முறைப்படி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே மாணவர்களுக்குத் தேவையான விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கவும், பள்ளிகளில் தேவையான தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் இரு மாநிலப் பள்ளிக்கல்வித்துறைகளும் உரிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.
School Reopen | மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு.. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அறிவிப்பு..!


