உக்ரைன்- ரஷ்யா இடையிலான போரை நிறுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக உள்ள ரஷ்யாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் பயணம் மேற்கொண்டார். மோடியின் ரஷ்ய பயணத்திற்கு உக்ரைன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தன.
இதனைத் தொடர்ந்து, சமநிலைப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி உக்ரைன் சென்றார். உக்ரைனுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெயரையும் மோடி பெற்றார். போலந்தில் இருந்து ரயில் போர்ஸ் ஒன் ரயில் மூலம் உக்ரைன் சென்ற மோடியை, உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் வரவேற்றார்.
பின்னர் தலைநகர் கீவில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற பிரதமரை, உக்ரைன் வாழ் இந்தியர்கள் வரவேற்றனர். அப்போது மோடியுடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்தும் அவர்கள் மகிழ்ந்தனர். இதையடுத்து, கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Also Read:
விஜய் கட்சி கொடியில் அடுத்தடுத்து சர்ச்சை… தமிழக வெற்றிக் கழகத்தின் அதிரடி முடிவு இதுதான்?
பின்னர், அங்குள்ள போர் நினைவு அருங்காட்சியகத்திற்கு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் சென்ற மோடிக்கு ரஷ்யப் படைகளால் தாக்கப்பட்டு உயிர்நீத்த குழந்தைகளின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, போர் என்பது பெரும் அழிவு சக்தி. குறிப்பாக குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தங்கள் கையெழுத்து
இதனைத் தொடர்ந்து, கீவ் நகரில் உள்ள அதிபர் ஜெலென்ஸ்கியின் இல்லத்திற்குச் சென்ற பிரதமர், அவரை ஆரத்தழுவி நட்பை வெளிப்படுத்தினார். இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், விவசாயம், மருத்துவம், கலாச்சாரம் மற்றும் மனிதாபிமான உதவிகள் ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியா நடுநிலை வகிக்காது!
பின்னர் பேசிய பிரதமர் மோடி, ரஷ்யா – உக்ரைன் போரில் இந்தியா நடுநிலை வகிக்காது, அமைதியின் பக்கம் நிற்கும் எனவும் கூறினார். இரு நாட்டு அதிபர்களும் இணைந்து பேசி போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கிடையே, ரஷ்ய அதிபர் புதின் எந்த நாட்டையும் எந்த தலைவரையும் மதிப்பதில்லை என ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டினார்.
இந்த சந்திப்பின்போது, உக்ரைன் அதிபரிடம் 4 நடமாடும் மருத்துவமனைகளை பிரதமர் மோடி ஒப்படைத்தார். அனைத்து மருத்துவ சூழ்நிலைகளுக்கும் ஏற்ற மருந்துகள் மற்றும் உபகரணங்களைக் கொண்ட இந்த நடமாடும் மருத்துவமனைகள் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டவை. போரில் காயமடைந்தவர்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்க இவை உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
