Last Updated:
மத்திய அரசு RTI சட்டத்தில் மாற்றம் திட்டமிட்டுள்ளது, பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம், அரசியல் விவாதம் உருவாகியுள்ளது.
100 நாள் வேலைத் திட்டத்தைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும் திருத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005, அதன் அடிப்படை நோக்கம் சிதையாமல் இருப்பதை உறுதி செய்ய, தற்போதைய சூழலுக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் தங்களது கருத்துகளை வெளிப்படையாகவும் தைரியமாகவும் பதிவு செய்ய ஒரு தனிப்பட்டச் சூழல் தேவை என்றும் தாங்கள் எழுதும் ஒவ்வொரு குறிப்பும் பொதுவெளியில் வரும் என்ற அச்சம் இருந்தால், அதிகாரிகள் துணிச்சலான முடிவுகளை எடுக்கத் தயங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிர்வாகத்தைப் பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், ஒரு முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு அரசு அதிகாரிகளுக்கு இடையே நடைபெறும் முதற்கட்ட ஆலோசனைகள், வரைவுக் குறிப்புகள் உள்ளிட்டவற்றை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டாம் என்று அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
அதிகாரிகளின் பணிப் பதிவேடுகள், இடமாற்றங்கள், ரகசியப் பணி அறிக்கைகளுக்கும் தகவல் அறியும் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவை, வெளிப்படைத்தன்மையைக் குறைப்பதற்கான முயற்சி அல்ல என்றும் மாறாக தேவையற்ற குறுக்கீடுகள் இன்றி அரசு இயந்திரம் இயங்குவதற்கான ஒரு சீர்திருத்தம் என்றும் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
Jan 30, 2026 12:01 PM IST


