கோலாலம்பூர்:
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 13-வது மலேசியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மேம்பாட்டு ஒதுக்கீடுகள், இனவாதப் பிரச்சினையாக மாற்றப்படக் கூடாது என்று வலியுறுத்தினார்.
அனைத்து இனத்தினரும், அவர்களின் தேவையின் அடிப்படையில், நியாயமான முறையில் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.
மலேசிய நாடாளுமன்ற மேலவையில், இந்தத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றிய அவர், மலாய், சீன, இந்திய, சபா, சரவாக் பூமிபுத்திராக்கள், ஒராங் அஸ்லி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறினார்.
ரொக்க உதவி பெறுவதின் வாயிலாக பயன் பெறுபவர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மலாய் மக்கள் ஆவர். அத்துடன், சபா, சரவாக் பூமிபுத்திராக்களும் குறிப்பிடத்தக்க அளவில் அரசாங்கத்திடமிருந்து பயனடைகின்றனர்.
அதுமட்டுமின்றி, குறிப்பாக, இந்தியச் சமூகத்திற்கு, கிட்டத்தட்ட RM1 பில்லியன் ரொக்க உதவியும், RM2.5 பில்லியன் வீட்டுவசதி உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது. இது, அனைத்து இனத்தவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டைக் காட்டுகிறது.
அன்வார், 13-வது மலேசியத் திட்டத்தின் ஒன்பது முக்கிய அம்சங்களையும் கோடிட்டுக் காட்டினார். இந்த அம்சங்கள், சமூக மேம்பாடு, வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், சமமான பொருளாதாரப் பங்கீடு, கல்வி மீட்பு, மலிவு விலை வீடமைப்பு, கிராமப்புற மேம்பாடு, உயர் மதிப்புள்ள தொழில்துறை வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, திறமையான, வெளிப்படையான அரசாங்கம் ஆகியவற்றை உள்ளடக்கியவை ஆகும்.




