Last Updated:
அமித்ஷா ரைசிங் பாரத் மாநாட்டில், திமுக ஊழலை மறைக்க தொகுதி மறுவரையை பேசுவதாக குற்றம்சாட்டினார். தென்னிந்தியாவிற்கு பாஜக அநீதி செய்யாது என்றும், தொகுதிகள் தக்கவைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
நியூஸ் 18 குழுமம் நடத்தும் ரைசிங் பாரத் (Rising Bharat) மாநாடு 2025-ல் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழ்நாட்டில் அவர்களின் ஊழலை மறைப்பதற்கு தொகுதி மறுவரை பிரச்சனையை எழுப்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
நியூஸ் 18 குழுமம் நடத்தும் ரைசிங் பாரத் (Rising Bharat) மாநாடு 2023 டெல்லியில் 8 மற்றும் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், மொத்தம் 100க்கும் மேற்பட்ட தலைவர்கள், 75க்கும் மேற்பட்ட அமர்வுகளில் உரையாற்றி வருகின்றனர்.
அந்தவகையில் இன்று (9ஆம் தேதி) நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தொகுதி மறுவரை குறித்து ஹிமாச்சல் பிரதேசத்திலோ அல்லது இந்தியா கூட்டணி ஆட்சியில் இருக்கும் எந்த மாநிலத்திலாவது ஏதாவது நடக்கிறதா என்றால் இல்லை. அரசு தொகுதி மறுவரை ஆணையத்தை அறிவித்துள்ளதா அல்லது உச்ச நீதிபதியை நியமித்துள்ளதா? ஆனால், தமிழ்நாட்டில் அவர்களின் ஊழலை மறைப்பதற்கு தொகுதி மறுவரை பிரச்சனையை எழுப்புகிறார்கள். தென்னிந்தியாவிற்கு பாஜக அநீதி இழைக்காது என்றும், ப்ரோ ரேட்டா அடிப்படையில், தொகுதிகள் தக்கவைக்கப்படும் என்பதை உறுதி அளிக்கிறேன்.
இதையும் படியுங்கள் : சென்னை வரும் அமித்ஷா! எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க திட்டம்?
அவர்கள் இந்தச் சத்தத்தை நிறுத்தினால், ஊழல் குறித்தும், வாரிசு அரசியல் குறித்தும் பதில் சொல்ல வேண்டிவரும். சட்டத்தின் அடிப்படையில், தொகுதி மறுவரை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கொண்டுவரப்படும் மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். ஒருவேளை அது நாடாளுமன்ற குழுவுக்கும் கூட அனுப்பப்படலாம். எனவே இப்போதே அவர்கள் கூச்சலிடுவது ஏன்?
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் பாஜக கூட்டணி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும். எதிர்தரப்பினர் நான் இந்தி பேசுவதாக சொல்வார்கள். நான் இந்தி பேசுபவன் அல்ல. நான் குஜராத்தி. நமது வேர்கள் மற்றும் வரலாற்றுடன் இணைக்க விரும்பினால், அனைத்து இந்திய மொழிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
நமது அரசாங்கத்திற்கு முன்பு காங்கிரஸ் அனைத்து மொழி மாணவர்கள் மீதும் இந்தியையும், ஆங்கிலத்தையும் திணித்தது. நாம் அரசு தேர்வுகளை பிராந்திய மொழிகளில் நடத்துகிறோம். மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவத்தை தங்களது பிராந்திய மொழிகளில் படிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
April 09, 2025 9:19 PM IST
Rising Bharat Summit 2025: ”மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்” – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா


