Last Updated:
அசாம், பிகார், சத்தீஸ்கர், ஹரியானா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலுக்கான 9 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது பாஜக.
மார்ச் மாதம் 16ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியின் 9 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இதில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பிகார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களை நிரப்புவதற்காக, மார்ச் மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 7 இடங்களும், தமிழ்நாட்டில் 6 இடங்களும், பிகார் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 5 இடங்களும் மாநிலங்களவையில் காலியாக இருக்கின்றன.
ஒடிசாவில் 4 இடங்களும், தெலங்கானா மற்றும் சத்தீஸ்கரில் தலா 2 இடங்களும், இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடமும் காலியாகின்றன.
தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு உள்ள எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பி.க்களையும், அதிமுக 2 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும். இதில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களில் பாஜக போட்டியிட இருக்கும் ஒன்பது இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பாஜக தேசியத் தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட நிதின் நபின் பிகார் மாநிலத்தில் இருந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


