ரம்யாவுக்கு மகன் அல்லது மகள் இருந்து, அவரது கணவர் உயிருடன் இருந்தால், இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 15(1)(a)-இன் கீழ் உள்ள விதிகள் பொருந்தும். இச்சூழ்நிலையில், அவரது பிறந்த வீட்டிலிருந்து வந்த சொத்துகள் மற்றும் பிற சொத்துகள் அனைத்தும் அவரது கணவர் மற்றும் குழந்தைகளுக்குச் சமமாகச் சேரும். இந்நிலையில், ரம்யாவின் பிறந்த வீட்டு வாரிசுகளுக்கு அந்தச் சொத்துகளின் மீது எந்தவிதமான சிறப்பு உரிமைகளும் இருக்காது. ரம்யாவுக்குக் குழந்தைகள் இல்லையெனில், பிரிவு 15(2)(a)-இன் கீழ் சட்டம் வேறுவிதமாகச் செயல்படும். அதாவது, அவரது தாய் அல்லது தந்தையிடமிருந்து வந்த சொத்துகள், அவரது பிறந்த வீட்டு வாரிசுகளுக்கே திரும்பச் சென்றுவிடும். அதாவது, தந்தையின் வாரிசுகள், சகோதரர்கள், சகோதரிகள் அல்லது பிற சட்டப்பூர்வ வாரிசுகள் அந்தச் சொத்தின் மீதான உரிமையைப் பெறுவார்கள். இச்சூழ்நிலையில், கணவருக்கோ அல்லது கணவர் வீட்டுத் தரப்பினருக்கோ அந்தச் சொத்தின் மீது எந்த உரிமையும் இருக்காது.

