குளுவாங்:
வட-தெற்கு நெடுஞ்சாலையின் (PLUS) வடக்கு நோக்கிச் செல்லும் திசையில், கிலோமீட்டர் 55.1-இல் வேன் ஒன்றும் லோரியும் மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும், 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு ரெங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் அடங்கிய குழுவினர் நள்ளிரவு 12:54 மணிக்குச் சென்றடைந்ததாகச் சம்பவ இடத்தின் செயல்பாட்டு அதிகாரி சோரோமி சாலி தெரிவித்தார்.
‘டொயோட்டா’ (Toyota) ரக வேனை ஓட்டிச் சென்ற பெண், ஓட்டுநர் இருக்கையின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வேனில் பயணித்த 3 குழந்தைகள், ஒரு மாற்றுத்திறனாளி ஆண் உட்பட 5 பயணிகள் காயமடைந்தனர். தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே பொதுமக்கள் அவர்களை மீட்டு வெளியே எடுத்தனர்.
விபத்துக்குள்ளான Isuzu ரக லோரியின் ஆண் ஓட்டுநர் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாகத் தப்பினார்.
சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



