Last Updated:
ரஷ்ய அதிபர் புதின், பஹல்காம் தாக்குதலை கண்டித்து, பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக பிரதமர் மோடிக்கு வாக்குறுதி அளித்தார்.
காஷ்மீர், பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு ராஜாங்க நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. அதேபோல், இந்தியா மீது பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதேசமயம், இரு நாடுகளும் தீவிர போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இரு தலைவர்களிடையே பேசியது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்ட ரஷ்ய அதிபர் புதின், பஹல்காம் தாக்குதலுக்கு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். மேலும், இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்த அதிபர் புதின், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு முழு ஆதரவை தருவதாக உறுதி அளித்துள்ளார். அதேசமயம், இந்தக் கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியா – ரஷ்யா உறவை வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் பேசியதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் மாஸ்கோவில் வரும் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும் இரண்டாம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், பஹல்காம் தாக்குதல் காரணமாக பிரதமர் மோடி தனது ரஷ்ய பயணத்தை ரத்து செய்தார்.
President Putin @KremlinRussia_E called PM @narendramodi and strongly condemned the terror attack in Pahalgam, India. He conveyed deepest condolences on the loss of innocent lives and expressed full support to India in the fight against terrorism. He emphasised that the…
— Randhir Jaiswal (@MEAIndia) May 5, 2025
இந்நிலையில், இன்று ரஷ்ய அதிபர் புதினிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வெற்றி தினத்தின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாட்டத்திற்கு அவருக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு அதிபர் புதினுக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.


