Last Updated:
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை தாக்கியது. சீனா அமைதிக்காக இரு நாடுகளும் நிதானமாக செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவை இணைந்து கூட்டாக நள்ளிரவில் இந்தத் தாக்குதலை நடத்தினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முர்தி, கோட்லி, முஷாபர்பாத், பாபல்பூர் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இந்த துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகம்மது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏவுகணை கொண்டு நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 9 இலக்குகளும் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் இந்த பதிலடி தாக்குதலை ‘போர் நடவடிக்கை’ எனக் குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், இந்தியாவின் ஏவுகணை தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த பாதுகாப்பு படையினர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர், எந்தவித எதிர் தாக்குதலையும் சமாளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் இந்தியாவில் அமைதியை சீர்குலைக்கவே பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய வெளியுறவு செயலாளர், தீவிரவாதிகளின் உட்கட்டமைப்பை தகர்க்கவே ”ஆபரேஷன் சிந்தூர்” மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் கலந்துகொண்டு விளக்கம் கொடுத்தனர். முன்னதாக பாகிஸ்தானிற்குள் நுழைந்து தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், “இன்று அதிகாலை நடந்த இந்தியாவின் இராணுவ நடவடிக்கை வருந்தத்தக்கது. தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதும் ஒருவருக்கொருவர் அண்டை நாடுகளாகவே இருக்கும். அவர்கள் இருவரும் சீனாவின் அண்டை நாடுகளும் கூட.
சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காகவும் பரந்த நலனுக்காக இரு தரப்பினரும் செயல்படவும், அமைதியாக இருக்கவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று தெரிவித்தார். இந்நிலையில், சீன தூதர் ஜியாங் ஜைடாங், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணை பிரதமருமான இஷாக் தரை சந்தித்துப் பேசியுள்ளார்.


