கோலாலம்பூர்:
புதிய தேசிய தொழில்துறை வரைவுத் திட்டம் 2030-ஐ (NIMP 2030) வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) ஒரு முக்கிய ஊக்கியாக உருவெடுத்துள்ளது. மலேசியாவை உயர் தொழில்நுட்பம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிய ஒரு நாடாக உருமாற்றும் இலக்கில், மாரா (MARA) கல்வி நிறுவனம் தொழில்துறை சார்ந்த கல்வி மற்றும் பயிற்சி (IBET) மூலம் திறமையான மனிதவளத்தை உருவாக்கி வருவதாக அதன் துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் மஹ்ஸான் தே தெரிவித்தார்.
இம்மாபெரும் இலக்கை எட்டுவதற்காக, 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் TVET துறைக்கான நிதி ஒதுக்கீடு 7.9 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை முன்னிறுத்தி, மின்சார வாகனங்கள் (EV), ஸ்மார்ட் உற்பத்தி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் போன்ற அதிநவீன துறைகளில் புதிய டிப்ளோமா பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
காலத்தின் தேவைக்கேற்ப இளைஞர்களைத் தயார்படுத்துவதே இந்த நிதி ஒதுக்கீட்டின் முதன்மை நோக்கமாகும்.
தொழில்துறையினருடன் நேரடி ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம், வேலைவாய்ப்புச் சந்தையில் நிலவும் திறன் இடைவெளியைக் குறைப்பதில் மாரா தீவிரம் காட்டி வருகிறது. இதன் வாயிலாக இளைஞர்களுக்கு அதிக வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்றும் அவர் மேலும் விளக்கமளித்தார்.




