Last Updated:
என்.டி.ஏ. கூட்டணியில் இருக்கும் அன்புமணி பாமக, தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்.டி.ஏ. கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இருந்துவரும் சூழலில் புதுச்சேரியில் அக்கட்சி தனித்து போட்டியிடும் முடிவில் இருப்பதாக மாவட்டச் செயலாளர் மதியழகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று (15ஆம் தேதி) அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23ஆம் தேதியும், புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மூன்று சட்டமன்றங்களுக்கும் ஏப்ரல் 9ஆம் தேதியும் வாக்குப் பதிவுகள் நடக்கின்றன. மேற்கு வங்கம் சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23ஆம் தேதி முதற்கட்ட வாக்குப் பதிவும், ஏப்ரல் 29ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவும் நடைபெறுகிறது.
புதுச்சேரியில் என்.டி.ஏ. கூட்டணியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்தக் கூட்டணி தொகுதி பங்கீடு கடந்த 13ஆம் தேதி பேசி முடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
Breaking News | புதுச்சேரியில் பாமக தனித்து போட்டி? | புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டோம்- பாமக அமைப்பாளர் மதியழகன்#BreakingNews #PMK #Puducherry pic.twitter.com/oeIDtDhOXm
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 16, 2026
அதன்படி, புதுச்சேரியில் என்.டி.ஏ. கூட்டணியில், 16 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸும், 14 தொகுதிகளில் பாஜகவும் போட்டியிடும். பாஜக வசம் இருக்கும் 14 தொகுதிகளில் அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணியில் அன்புமணி பாமக இருக்கும் நிலையில், புதுச்சேரியில் கூட்டணியில் இருக்கிறதா எனத் தெரியாத சூழல் இருக்கிறது. புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், இன்று திடீரென பாமக நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி பாமக மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த மதியழகன், “புதுச்சேரியில் என்.டி.ஏ. கூட்டணியில் பாமக இருக்கிறதா என்பது தெரியவில்லை.
என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜக தலைவர் ராமலிங்கம் ஆகிய இருவரையும் கூட்டணி தொடர்பாக சந்தித்தோம். கூட்டணியில் ஐந்து தொகுதிகளைக் கேட்டோம். ஆனாலும், எந்தப் பதிலும் அவர்களிடத்தில் இருந்துவரவில்லை.
எனவே புதுச்சேரியில் மூன்றாவது அணியாக போட்டியிட முடிவு செய்துள்ளோம். எங்கள் தலைமையை ஏற்று கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் கூட்டணியோடு தேர்தலைச் சந்திப்போம். இல்லை என்றால் தனித்து போட்டியிடவும் முடிவு செய்துள்ளோம். இதனை தீர்மானமாக பாமக தலைவர் அன்புமணிக்கு அனுப்பி வைக்கிறோம். அவரது முடிவின் அடிப்படையில் எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Puducherry (Pondicherry)
NDA | தொகுதி பங்கீட்டில் ஏற்படாத உடன்பாடு; கூட்டணி முறிவு… அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட புதுச்சேரி பாமக முடிவு?


