கோலாலம்பூர்:
மலேசியாவின் டிஜிட்டல் அடையாள முறையை (National Digital Identity) நாடு தழுவிய அளவில் வலுப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு 15 மில்லியன் புதிய பயனர்களைப் பதிவு செய்ய ‘மைடிஜிட்டல் ஐடி’ திட்டமிட்டுள்ளது.
இதுவரை சுமார் 8.7 மில்லியன் பயனர்கள் இதில் இணைந்துள்ளனர். இது நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு இலக்கில் பாதியைத் தாண்டியுள்ளது. “மைடிஜிட்டல் ஐடியை வெறும் தொழில்நுட்பமாக மட்டும் பார்க்காமல், பொதுமக்களின் அன்றாடத் தேவையாக மாற்றுவதே எங்கள் வியூகம்,” என்று மைடிஜிட்டல் ஐடியின் துணை தலைமை நிர்வாக அதிகாரி ரீட்டா இரினா அப்துல் வஹாப் தெரிவித்துள்ளார்.
தற்போது 80-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் துறை செயலிகள் மற்றும் இணையதளங்களுடன் மைடிஜிட்டல் ஐடி இணைக்கப்பட்டுள்ளது என்றும், வாரம் ஒன்றுக்கு 400,000-க்கும் அதிகமான முறை இந்தத் தளம் பயன்படுத்தப்படுகிறது. இது மக்கள் மத்தியில் இந்தத் திட்டத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் சொன்னார்.
இ-ஹெய்லிங் (e-hailing) வாகன ஓட்டுநர்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, புதிய பயனர்களை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.




