ஈரானில் வானளாவிய அதிகாரம் படைத்த அயதுல்லா அலி கமேனியை அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து வான்வழித் தாக்குதல் மூலம் கொலை செய்தனர். போர்ப் பதற்றத்திற்கு மத்தியில் புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை இடைக்கால உச்சபட்ச தலைவராக அயதுல்லா அலி ரேசா அராஃபி என்பவர் நியமிக்கப்பட்டார்.
ஆனால், அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி, உச்சபட்ச தலைவர் பதவி காலியானால், அடுத்த 50 நாட்களுக்குள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியது கட்டாயமாகும்.
எனவே, இடைக்கால தலைவர் நியமனத்தின் போதே, 88 ஷியா மதகுருமார்களைக் கொண்ட வல்லுநர் குழு, புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியிலும் இறங்கியது.
இந்தக் குழுவில் உள்ள 88 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு பெறுபவர் அடுத்த உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்பது விதியாகும்.
இந்நிலையில், உயிரிழந்த கமேனியின் இரண்டாவது மகன் மோஜ்தபாவை ஈரானின் உச்சபட்ச தலைவராக வல்லுநர் குழு தேர்வு செய்துள்ளது.
1969-ஆம் ஆண்டு ஈரானின் மாஷட் நகரில் பிறந்த மோஜ்தபா, இஸ்லாமிய தத்துவப் படிப்பு படித்தவர். சிறு வயது முதலே தந்தைக்கு மிக நெருக்கமாக இருந்து வந்த மோஜ்தபா, ஷியா மத குருவாகவும் செயல்பட்டு வந்தார்.
ஈரான்-ஈராக் யுத்தத்தின் போது இளைஞராக இருந்த மோஜ்தபா, ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பைப் பெற்றார். அதன் மூலம், ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையின் முக்கிய புள்ளியாக மோஜ்தபா மாறினார்.
மேலும், அந்நாட்டு அரசியலிலும் திரைமறைவில் மோஜ்தபா ஆதிக்கம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
56 வயதான மோஜ்தபா, ராணுவத்துடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததே அடுத்த தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதான காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும், மோஜ்தபாவை புதிய தலைவராக தேர்வு செய்ய வல்லுநர் குழுவிற்கு புரட்சிகர பாதுகாப்பு படை அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும், முடியரசுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஈரான் குடியரசு நாட்டில் தந்தைக்குப் பிறகு உச்ச தலைவர் பதவியை மகன் ஏற்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில், கமேனியுடன் மோஜ்தபாவின் மனைவியும், அந்நாட்டின் பழமைவாத கொள்கை கொண்ட மூத்த அரசியல்வாதியின் மகளுமான ஜஹ்ராவும் கொலை செய்யப்பட்டார்.
மோஜ்தபாவிற்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில், அவர்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 27 ஆண்டுகளாக திரைக்குப் பின்னால் அரசியலில் முக்கிய பங்காற்றி வந்த மோஜ்தபா, தற்போது நேரடியாக அதிகாரப் பொறுப்பை ஏற்று ஈரானை வழிநடத்த உள்ளார்.
அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிரான யுத்தத்தில் புதிய தலைவர் மோஜ்தபாவின் அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறு இருக்கும் என்று உலகம் முழுவதிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
