சீனாவின் புதிய செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட் ஆன மேனஸ் (Manus), சிக்கல்கள் நிறைந்த நிஜ உலகப் பணிகளைக் கையாளும் திறனுடன் உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
Manus – AI agent
சீன முதலீட்டாளர்கள் மற்றும் டெவலப்பர்களின் உதவியுடன், ஒரு சிறிய குழுவால் உருவாக்கப்பட்ட மேனஸ், தற்போது வலைதளத்தில் முன்னோட்ட அளவில் மட்டுமே கிடைக்கிறது. அதன் manus.im வலைதளத்தில் இருக்கும் செயல் விளக்க வீடியோ, படிப்படியான அதன் செயல்முறை மூலம் தனிப்பயன் வலைத்தளத்தை உருவாக்கும் திறனைக் காட்டுகிறது.
2025-ஆம் ஆண்டில் பல மேம்பட்ட ஏஐ மாடல்களுடன் சீனா முன்னிலை வகிக்கிறது. அண்மையில் கூட தனது டீப்சீக் ஏஐ மூலம் அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கை சீனா அலறவிட்டது நினைவிருக்கலாம். இது, அமெரிக்க ஏஐ மேம்பாட்டிற்கான “ஸ்புட்னிக் தருணம்” என்று கூட விவரிக்கப்பட்டது.
அமெரிக்க தொழில்நுட்ப ஜாம்பவான்களால் செய்யப்படும் செலவில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே கொண்டு சீனாவால் மிகப்பெரிய மொழி மாதிரிகளை (LLMs) உருவாக்க முடிந்தது. இந்த வகையான தொழில்நுட்ப முன்னேற்றத்தை மீண்டும் செய்ய முடியும் என்பது மேனஸ் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
ஜப்பான் பயணத்திற்கான திட்டத்தை வகுத்தல், டெஸ்லாவின் பங்குகள் பற்றிய ஆழமான பகுப்பாய்வை வழங்குதல், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான படிப்புகளை உருவாக்குதல், வெவ்வேறு காப்பீட்டுக் கொள்கைகளை ஒப்பிடுதல் மற்றும் வணிகத்திலிருந்து வணிகத்திற்கு சப்ளையர் ஆதாரத்தில் உதவுதல் போன்ற உதாரணங்களை வழங்குவதன் மூலம், நிஜ உலக சிக்கலான பணிகளில் மேனஸ் கவனம் செலுத்துவதாக அதன் வலைத்தளம் கூறுகிறது.

