மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த தேர்தலில், பாஜகவை உள்ளடக்கிய ஆளும் கூட்டணியான மகாயுதி மற்றும் காங்கிரஸ் இடம்பெற்ற மகா விகாஸ் அகாடி இடையே போட்டி இருந்தது. தேர்தல் முடிவுகளின்படி, பாஜக போட்டியிட்ட 149 இடங்களில் 132 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களையும், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின.
எதிர்முனையில், காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் மட்டுமே வென்றி பெற்றுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20 இடங்களையும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களையும் மட்டுமே கைப்பற்றின.
மொத்தம் 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை எனும் நிலையில், பாஜக கூட்டணி 234 இடங்களை அள்ளியதால், மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் இடம்பெற்ற எதிர் கூட்டணி மொத்தம் 50 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற மொத்தமுள்ள இடங்களில் 10 விழுக்காட்டை பெற்றிருக்க வேண்டும் எனும் நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் எந்த கட்சியும் அந்த இலக்கை எட்டவில்லை.
இந்நிலையில், தோல்வி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என்றும், அதுபற்றி விரிவாக ஆராய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்கிய ஜார்கண்ட் மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் எனக் கூறியுள்ள ராகுல் காந்தி, இந்த வெற்றிக்காக முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அனைத்து காங்கிரஸ் மற்றும் ஜேஎம்எம் தொண்டர்களுக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வயநாட்டில் உள்ள தனது குடும்பத்தினர் பிரியங்காவின் மீது வைத்துள்ள நம்பிக்கையால் பெருமை அடைவதாகவும், வயநாட்டின் முன்னேற்றத்திற்காக பிரியங்கா கலங்கரை விளக்கம் போல் இருப்பார் எனவும் கூறியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
