Last Updated:
கேரளாவின் அடுத்த முதலமைச்சர் குறித்த இறுதி முடிவை எடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் மேலிடத்திற்கே விட்டுவிடும் தீர்மானத்தை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது.
கேரளாவின் அடுத்த முதலமைச்சருக்கான போட்டியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு 47 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளதாக மேலிடப் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி, தனித்தே 63 இடங்களையும், ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களையும் கைப்பற்றி, மாபெரும் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஆட்சியமைப்பதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது.
முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ஆலப்புழா நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், முன்னாள் கேரள காங்கிரஸ் தலைவரும் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதாலா ஆகிய 3 பேர் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திரா பவனில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர்களான முகுல் வாஸ்னிக் மற்றும் அஜய் மக்கான் ஆகியோர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாகச் சந்தித்து அவர்களின் விருப்பங்களைக் கேட்டறிந்தனர்.
இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 63 பேரில் கே.சி.வேணுகோபாலுக்கு 47 பேர், ஆதரவு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், வி.டி.சதீசனுக்கு 35 பேரும், சென்னிதாலாவுக்கு 23 பேரின் ஆதரவும் உள்ளது என அவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கேரளாவின் அடுத்த முதலமைச்சர் குறித்த இறுதி முடிவை எடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் மேலிடத்திற்கே விட்டுவிடும் தீர்மானத்தை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய தனிப்பட்ட உரையாடலின் அடிப்படையில் பார்வையாளர்கள் தங்களது அறிக்கையை அடுத்த இரண்டு நாட்களில் விரிவாகச் சமர்ப்பிப்பார்கள் என தெரிகிறது.


