Last Updated:
நாளை சுபமுகூர்த்தத் தினம் உள்ள நிலையில் தோவாளை மலர் சந்தையில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.5000க்கு விற்பனையாவதால் மக்கள் அதிர்ச்சி.
தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையான குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன. மற்ற மாவட்ட மலர் சந்தைகளை ஒப்பிடுகையில் தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை குறைவாக இருக்கும். இங்கு பூக்களின் வரவு, தேவை, விற்பனையைப் பொறுத்து விலைகளில் அடிக்கடி மாற்றம் ஏற்படும்.
பொதுவாக விசேஷ தினங்கள் மற்றும் சுப முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரிப்பது வழக்கம். நாளை முகூர்த்த நாள் என்பதால் இன்று பூக்களின் விலை பல மடங்கு எகிறி உள்ளது. இன்றைய நிலவரப்படி வெளியூர் மல்லிப்பூ – 5000, உள்ளூர் மல்லிப்பூ – 3000, பிச்சிப்பூ – 1900, அரளிப்பூ – 230, வாடா மல்லி – 150, கேந்தி – 70, சம்பங்கி – 80, முல்லை – 1500, ரோஸ் – 250, ஸ்டம்ப் ரோஸ் – 350, துளசி – 40, தாமரை – 20, மரிக்கொழுந்து – 150, செவ்வந்தி – 200க்கும் விற்கப்படுகிறது.
இதுகுறித்து தோவாளை மலர் சந்தையை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் பனிப்பொழிவின் காரணமாக பல்வேறு இடங்களில் பூக்களை பறிக்க முடியாத நிலை நிலவி வருகிறது.
தற்போது ஐயப்பன் கோவில் சீசன் மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் அதிகம் உள்ளதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப பூக்களின் வரத்து குறைவாக உள்ளதால் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் இன்னும் சில நாட்கள் நீடிக்கலாம்” என தெரிவித்தனர்.
Kanniyakumari,Tamil Nadu
November 29, 2025 2:42 PM IST

