மாதச்சம்பளதாரர்கள் முன்கூட்டியே ரீபண்ட் தொகையைப் பெறுவதற்காக, வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து வரும் நிலையில், ஜூன் 15ஆம் தேதி வரை காத்திருப்பது நல்லது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தனிநபர்கள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஐடிஆர் படிவங்கள் கிடைத்தாலும், சம்பளம் பெறுபவர்கள் வரி தாக்கலை ஜூன் 15ஆம் தேதி வரை தள்ளி வைப்பது நல்லது. ஏனெனில், அவர்களது வருடாந்திர தகவல் அறிக்கைகள் (AIS) மற்றும் படிவம் 26AS ஆகியவை மே 31ஆம் தேதியில்தான் முழுமையாக அப்டேட் செய்யப்படுகின்றன. மேலும், சம்பளம் வாங்குவோர் தங்கள் TDS சான்றிதழ்கள் மே 31ஆம் தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் வழங்கப்படுகின்றன. சில தகவல்கள் மே 31ஆம் தேதிக்கு முன்பே (AIS) மற்றும் படிவம் 26ASல் காட்டப்படலாம்.
இருப்பினும், பொதுவாக முந்தைய நிதி ஆண்டின் கடைசி காலாண்டிற்கான தகவல்கள் மே 31ஆம் தேதி வரையில் அப்டேட் செய்யப்பட அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், மே 31ஆம் தேதிக்கு முன்பே ஐடிஆர் தாக்கல் செய்தால், முழுமையற்ற தகவல்களின் அடிப்படையில் வரி தாக்கல் செய்ய கூடும். தவறவிடப்பட்ட தகவல்கள் காரணமாக, வருமானம் குறைவாகக் காட்டப்பட்டால், வருமான வரித்துறை அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, ஜூன் 15 வரை காத்திருப்பது நல்லது.
குறிப்பாக, மே 31ஆம் தேதிக்குள் (AIS) மற்றும் படிவம் 26AS ஆகியவை முழுமையாக அப்டேட் செய்யப்பட வாய்ப்பில்லை. வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறைக்கு நிதி பரிவர்த்தனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையில், பங்கு வருமானம், மியூச்சுவல் ஃபண்ட், டிவிடெண்டுகள், சேமிப்பு கணக்குகளில் இருந்து கிடைக்கும் வட்டி, நிலையான வைப்புத் தொகைகள், பப்ளிக் பிராவிடெண்ட் பண்ட், கிரெடிட் கார்டு பில் செலுத்துதல் போன்ற பல்வேறு தகவல்களைக் கொண்டுள்ளன. நிறுவனங்கள் இந்த நிதி அறிக்கையை தாக்கல் செய்த பிறகு வரி செலுத்துவோருக்கு அப்டேட் செய்யப்பட்ட வருடாந்திர தகவல் அறிக்கை கிடைக்கும்.
வருமான வரித் தாக்கல் செய்யும்போது, உங்களது வருமானம் குறித்து சரியான தகவல்களை முழுமையாக கொடுப்பது அவசியம். AIS அறிக்கையில் உள்ள தகவல்களை பயன்படுத்தி உங்களது வரி வருமானத்தை துல்லியமாக கணக்கிட முடியும். இதன் மூலம் வரி செலுத்துவதில் தவறுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
