ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டது ’ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற நிறுவனம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகளான பவன் குமார் சந்தனா, நாகா பரத் தாகா ஆகியோரால் 2018 ஆம் ஆண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தொடங்கப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ராக்கெட் தயாரிப்புகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிறுவனம் தயாரித்த விக்ரம்-1 ராக்கெட்டை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், விண்ணில் செலுத்துவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்னதாக ஏவு பாதை கண்காணிப்பு அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், கவுன்டவுன் நிறுத்தப்பட்டு ராக்கெட் ஏவுதல் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் ராக்கெட் நண்பகல் 12.05 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. அதற்கு அடுத்த 15 நிமிடங்களில் விக்ரம்-1 ராக்கெட் கொண்டு சென்ற
செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.
ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதள மையத்தில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் விஞ்ஞானிகள் இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து ’ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
இதன்மூலம் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுற்றுப்பாதையில் ராக்கெட்டுகளை நிலைநிறுத்தும் திறனைப் பெற்ற தனியார் நிறுவனங்களைக் கொண்ட உலகின் மூன்றாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
ஏழு மாடி கட்டட உயரமுடைய விக்ரம்-1 ராக்கெட், வலிமையான கார்பன் கூட்டுப் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. விக்ரம்-1 ஒரு நான்கு கட்ட ராக்கெட் ஆகும்.
முதல் 3 கட்டங்களில் திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. ராக்கெட் பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி அதிவேகத்தில் மேலே எழும்புவதற்குத் தேவையான பிரமாண்ட உந்துவிசையை இந்த நிலைகள் வழங்குகின்றன.
ராக்கெட்டின் கடைசிப் பகுதி திரவ எரிபொருளால் இயங்குகிறது. இது விண்வெளியில் செயற்கைக்கோள்களை மிகத் துல்லியமான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த உதவுகிறது.
விக்ரம்-1 ராக்கெட்டின் இறுதிச் சுற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள இன்ஜினுக்கு, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சி.வி. ராமன் நினைவாக ‘ராமன் இன்ஜின்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் முழுக்க முழுக்க 3D-Printing தொழில்நுட்பம் மூலம் உலோகப் பொடிகளைக் கொண்டு உள்நாட்டிலேயே அச்சிடப்பட்டு உருவாக்கப்பட்டது.
விக்ரம்-1 ராக்கெட்டின் மிக முக்கிய வியாபார உத்தி அதன் வேகம் மற்றும் எளிமைதான். அதாவது வழக்கமான பெரிய ராக்கெட்டுகளை ஏவுவதற்குப் பல மாதங்கள் திட்டமிடல் தேவைப்படும். ஆனால், விக்ரம்-1 ராக்கெட்டை வெறும் 24 முதல் 72 மணி நேரத்திற்குள் அசெம்பிள் செய்து ஏவுதலுக்குத் தயார் படுத்திவிட முடியும்.
பூமியிலிருந்து 450 கிலோ மீட்டர் உயர சுற்றுப்பாதையை இலக்காகக் கொண்டு பாய்ந்த இந்த ராக்கெட், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களான Grahaa Space, Cosmoserve, DCubed தொழில்நுட்ப சோதனை செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது.
விக்ரம்-1 ராக்கெட் ஏவுதலின் போது “காஸ்மிக் ப்ளூம்” என்ற பெயரில் பிரத்யேக வைரத் தாமரை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பெங்களூருவைச் சேர்ந்த ‘காஸ்மோஸ் டயமண்ட்ஸ்’ என்ற நிறுவனம் இந்த வைரத் தாமரையை வடிவமைத்துள்ளது.
சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்தத் தாமரை, ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட 32 பேரிக்காய் வடிவ செயற்கை வைரங்களால் உருவாக்கப்பட்டது.
விண்வெளிக்குச் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் மற்றும் வெப்பத்தைத் தாங்கும் வகையில், இந்த வைரங்கள் தங்கத்தில் பதிக்கப்பட்டு, ஒரு பிரத்யேக அலுமினியத் தகட்டில் பாதுகாப்பாகப் பொருத்தப்பட்டு ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டிருந்தன.
தற்போது விக்ரம்-1 ராக்கெட் வெற்றிகரமாகச் சுற்றுப்பாதையை அடைந்துவிட்டதால், இந்த வைரத் தாமரையும் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது!

