ஈரான் – இஸ்ரேல் இடையே தொடர்ந்து மோதல் வெடித்துவருகிறது. இதில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாக தலையிட்டு, ஈரான் அணு உலை நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், மத்திய கிழக்கில் இன்னும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில், ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் இன்று ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் அவர் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, ஈரான் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யத் தயார் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். ஏற்கனவே ஈரானுக்கு ஆதரவாக சீனா உட்பட பல நாடுகள் தங்களது கருத்தை தெரிவித்துள்ள நிலையில், ரஷ்ய அதிபரின் கருத்தும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த இரு நாட்டு மோதலின் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் எனும் தகவலும் வெளியாகிவருகிறது. ஒருவேளை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் நாட்டில் கடுமையாக உயரும். இதனால், பெரும்பாலான மக்கள் கடும் சிரமத்தைச் சந்திக்க நேரிடும்.
நுகர்வோர் தரப்பில் இப்படியான பாதிப்புக்கு வாய்ப்பு இருக்கும் சூழலில், ஈரான் – இஸ்ரேல் மோதல், தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வேறு ஒரு பெரும் அடியை கொடுத்துள்ளது. இந்தியாவின் பாஸ்மதி அரிசி பெரும் அளவில், மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா, ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது.
ஈரானுக்கு இந்த 2024 – 2025 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து 1 மில்லியன் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது மோதல் வெடித்துள்ளதால், 1,00,000 டன் பாஸ்மதி அரிசி இந்தியத் துறைமுகங்களில் தேக்கம் அடைந்துள்ளன.
இது தொடர்பாக பேசிய அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சதீஷ் கோயல், இந்தியத் துறைமுகங்களில் 1,00,000 டன் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கிவைக்கப்பட்டுள்ளது. இந்திய பாஸ்மதி ஏற்றுமதியில் ஈரான் 18-20 சதவீதம் வரை பூர்த்தி செய்துவருகிறது. தற்போது அவை அப்படியே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மோதல்கள் பொதுவாக கப்பல் காப்பீட்டுக் கொள்கைகளின் கீழ் வருவதில்லை. காப்பீடு உத்தரவாதம் இல்லாததால் ஏற்றுமதியும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியாவில் பாஸ்மதி அரிசியின் விலை கிலோவுக்கு ரூ. 4 முதல் ரூ. 5 வரை குறைந்துள்ளது. இன்னும் அரிசி ஏற்றுமதி செய்யப்படாமல் இருந்தால், இந்தியாவில் இன்னும் பாஸ்மதி அரிசியின் விலை குறையும் வாய்ப்பு உள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் பெரும் நட்டத்தை சந்திக்க வேண்டிய சூழலும் இருந்துவருகிறது.
இந்த நெருக்கடி குறித்து ஆலோசிக்க மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் வரும் 30ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
June 23, 2025 8:11 PM IST

