ஏமன்
மத்திய கிழக்கில் இருக்கும் முக்கிய சக்திகளில் ஒன்றான ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு ஏமனிலிருந்து இயங்குகிறது. ஹிஸ்பொல்லா தலைவர் கொலைக்குப் பிறகு இஸ்ரேலைத் தாக்கியது ஏமன்.
இதற்குப் பதிலடியாக ஏமனிலிருந்த இரண்டு துறைமுகங்களைத் தாக்கியது இஸ்ரேல். அந்த தாக்குதலுக்குப் பிறகு, “மத்திய கிழக்கில் எந்த நாடும் எங்களுக்கு வெகு தொலைவில் இல்லை” என எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல்.
கத்தார் அதிபர் தமீம் பின் ஹமத் அல் தானியை சமீபத்தில் ஈரான் அதிபர் மசௌட் பெசேஷ்கியான் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது!

இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
போரின் ஆரம்பம் முதலே அமைதிக்காகக் குரல்கொடுத்து வருகிறது இந்தியா. ஆனால் எந்த நாட்டுக்கும் அமைப்புகளுக்கும் எதிராகக் கண்டனங்களை முன்வைக்கவில்லை.
ஹிஸ்பொல்லா – இஸ்ரேல் இடையிலான தாக்குதல்கள் தீவிரமடைந்தபோது, இஸ்ரேல் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, “தீவிரவாதத்துக்கு நம் உலகத்தில் இடமில்லை” எனப் பேசியிருந்தார்.
இஸ்ரேல் கூறும் ‘அமைப்புகளுக்கு’ எதிரான தாக்குதல் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளும் இந்தியா, மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்படும் மக்களுக்காகவும் பேசிவருகிறது.
வரலாற்று ரீதியாகப் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், அரசியல் ரீதியாக இந்தியாவின் நலம் சார்ந்து அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் நிலையிலேயே இந்தியா இருப்பதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
மறுபக்கம் இந்தியாவுடன் நல்லுறவில் இருக்கும் ரஷ்யா ஈரானுக்கு ஆதரவாக இருப்பதனால் முழுமையாக எந்த ஒரு அணிக்கும் ஆதரவு அளிக்காத நிலையைத் தொடர்கிறது இந்தியா.
இஸ்ரேல் – ஈரான் நாடுகளில், இந்தியாவுக்கு மிகத் தேவையான கூட்டாளி இஸ்ரேல் தான் என்றாலும், இந்தியாவின் ஆதரவு ‘அமைதிக்கு மட்டும்தான்’ என்ற நிலைப்பாட்டைத் தொடர்கிறது. இருதரப்பு உறவுகளையும் தக்கவைக்க நுணுக்கமான முடிவுகளை எடுத்துவருகிறது இந்தியா!

