Last Updated:
மீட்பு நடவடிக்கை குறித்த வீடியோ காட்சிகளை வெளியிடப் போவதில்லை என்று இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை அறிவித்துள்ளது.
இலங்கை அருகே அமெரிக்காவால் தாக்குதலுக்கு உள்ளான ஈரான் கப்பலில் இருந்து சுமார் 70 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், சுமார் 100 பேரின் நிலை தெரியவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 100 வீரர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை சார்பில் வங்காள விரிகுடா கடலில் நடந்த மிலன் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்ற ஈரானை சேர்ந்த ஐஆர்ஐஎஸ் டினா ரக போர் கப்பல், விசாகப்பட்டினத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு திரும்பியது.
ஈரான் நோக்கி சென்று கொண்டிருந்த இந்த போர் கப்பலில் ராணுவ வீரர்கள் உள்பட 180 பேர் பயணித்த நிலையில், இலங்கையின் கலி நகர் அருகே இந்திய பெருங்கடலில் திடீர் தாக்குதலுக்கு உள்ளானது.
கடலில் போர் கப்பல் மூழ்கிய நிலையில் இதில் இருந்தவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களில் 70-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர் மீட்டு கலி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய 100-க்கும் மேற்பட்டோரை, போர் கப்பல் மூழ்கிய பகுதியில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தேடி வருவதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்த மீட்பு நடவடிக்கை குறித்த வீடியோ காட்சிகளை வெளியிடப் போவதில்லை என்று இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை அறிவித்துள்ளது. இது மற்றொரு நாட்டின் ராணுவம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
Israel vs Iran : இலங்கை அருகே ஈரான் போர்க்கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா.. 100 வீரர்கள் பலியானதாக தகவல்


