ஜனவரி மாதம் தொடங்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று அதிகாலை முதல் காஸா முழுவதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். காஸா நகரம், டெய்ர் அல்-பலா, கான் யூனிஸ், ரஃபா உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததற்குப் பிறகு இஸ்ரேல் நடத்தியிருக்கும் மிகக் கொடூரமான தாக்குதல் இது. குறிப்பாக அகதிகள் தங்ககியிருந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தத் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு இஸ்ரேல், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தாக்குதலில் பெரும்பாலான குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக காஸா சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதேபோன்று சிரியா, லெபனானின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் போரைத் தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

