வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெருசலேம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் எச்சரிக்கையை மீறி, பாலஸ்தீனம் மக்கள் அடைக்கலம் புகுந்துள்ள ரபா பகுதியில் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் விடுத்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, கடந்தாண்டு அக்டோபரில் இருந்து போர் நடந்து வருகிறது. இஸ்ரேல்-ஹாமாஸ் போர் குறித்து பேட்டி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‛‛காசாவில் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். பாலஸ்தீனம் மக்கள் அடைக்கலம் புகுந்துள்ள ரபா பகுதியில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
உயிரிழப்புகளை குறைக்க தவறிய நெதன்யாகு, இஸ்ரேலுக்கு உதவுவதற்கு பதிலாக கூடுதலாக வலியை ஏற்படுத்தி வருகிறார். காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் தனது சா்வதேச ஆதரவை இழக்க நேரிடும். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்து உள்ளனர் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியாது” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பதாவது: நாங்கள் ரபா நகரில் தாக்குதல் நடத்துவோம். போரில் இருந்து நாங்கள் விலக போவதில்லை. இஸ்ரேலில் 1,160 பேரை கொன்று குவித்த கொடிய செயலே, தன்னுடைய உறுதியான முடிவிற்கு காரணம்.
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு எண்ணற்ற தலைவர்களின் ஆதரவு உள்ளது. போரானது நான்கில் 3 பங்கு நிறைவடைந்து விட்டது. ஒரு மாதத்திற்குள் போர் முடிவுக்கு வந்து விடும். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement