Last Updated:
இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் ராஜஸ்தான் அணிக்கு அதிகரித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த ராஜஸ்தான் அணியின் முடிவை லக்னோவின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக எதிர்கொண்டனர். லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் குவித்து துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
அவருக்கு ஜோடியாக விளையாடிய ஜோஷ் இங்கிலிஸ் 29 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். இறுதி கட்டத்தில் கேப்டன் ரிஷப் பண்ட் 35 ரன்கள் எடுக்க, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை எட்டியது. ராஜஸ்தான் தரப்பில் யாஷ் ராஜ் புஞ்சா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி மின்னல் வேகத் தொடக்கத்தை அளித்தது.
ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த விக்கெட் கீப்பர் துருவ் ஜூரலுடன் இணைந்த வைபவ் சூர்யவன்ஷி, மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர் மழை பொழிந்தார். லக்னோவின் பந்துவீச்சை நாசமாக்கிய சூர்யவன்ஷி வெறும் 38 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 பிரம்மாண்ட சிக்ஸர்களுடன் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்தாலும், இறுதிவரை அசைக்க முடியாமல் நின்ற துருவ் ஜூரல் 38 பந்துகளில் 53 ரன்களும், டொனாவன் ஃபெரீரா 16 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 225 ரன்கள் எடுத்து இலக்கை மிக எளிதாகக் கடந்து அசத்தியது.
லக்னோ தரப்பில் மோசின் கான் மற்றும் ஆகாஷ் சிங் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
May 20, 2026 12:05 AM IST


