Last Updated:
ஆட்டநாயகனாக பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளும், பேட்டிங்கில் முக்கியமான 7 ரன்களும் எடுத்த புவனேஷ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராய்ப்பூரில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நமன் திர் 47 ரன்களும், திலக் வர்மா 57 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார் மிகச்சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மும்பை அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார்.
167 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆர்சிபி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. நட்சத்திர வீரர் விராட் கோலி தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் ஆர்சிபி 39 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும், அனுபவ வீரர் குருணால் பாண்டியா இக்கட்டான நிலையில் அதிரடியாக விளையாடி 46 பந்துகளில் 73 ரன்கள் (4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) குவித்து அணியை வெற்றியின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றார். இவருக்கு துணையாக ஜேக்கப் பெத்தேல் 27 ரன்கள் எடுத்தார்.
ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் விக்கெட்டுகள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை தரப்பில் கார்பின் போஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபிக்கு கடும் சவாலளித்தார். இருப்பினும், கடைசி நேரத்தில் புவனேஷ்வர் குமார் மற்றும் ரசிக் சலாம் நிதானமாக விளையாடி 20-வது ஓவரில் அணியை வெற்றி பெறச் செய்தனர். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டபோது பவுலரான ரசிக் சலாம் கவனத்துடன் பந்தை அடித்து 2 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
ஆட்டநாயகனாக பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளும், பேட்டிங்கில் முக்கியமான 7 ரன்களும் எடுத்த புவனேஷ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றி ஆர்சிபி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மேலும் இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளைப் பெற்று ஆர்சிபி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
May 11, 2026 12:33 AM IST


