Last Updated:
கர்நாடக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்களுக்கு 3 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவித்திருந்தார்
ஐபிஎல் 2026 சீசனின் இறுதிப்போட்டி, நடப்பு சாம்பியனான ஆர்சிபி (RCB) அணியின் சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது பிசிசிஐ (BCCI) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இறுதிப்போட்டி மே 31-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பெங்களூருவில் நிலவும் உள்ளூர் அரசியல் சிக்கல்கள் மற்றும் செயல்பாட்டு ரீதியான தடைகள் காரணமாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் கிரிக்கெட் சங்கம் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து பிசிசிஐ-யின் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட சில கோரிக்கைகள் வந்ததால், இறுதிப்போட்டி பெங்களூருவிலிருந்து மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
முன்னதாக, ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் குறைந்தது 5 ஐபிஎல் டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயானந்த் காஷப்பனவர் கோரிக்கை விடுத்திருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விஐபி-க்கள் என்றும், அவர்கள் வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவது முறையாக இருக்காது என்றும் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்களுக்கு 3 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவித்திருந்தார். இத்தகைய அரசியல் தலையீடுகள் மற்றும் டிக்கெட் விநியோகத்தில் ஏற்பட்ட குழப்பங்களே பிசிசிஐ இந்த அதிரடி முடிவை எடுக்க முக்கிய காரணமாக அமைந்தன.

