Last Updated:
இந்த ஆண்டு பெங்களூருவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.
வருகிற மார்ச் 28-ஆம் தேதி தொடங்கவுள்ள 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஆண்டும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தும் முனைப்பில் உள்ளது.
கடந்த முறை ஆர்சிபி அணி கோப்பையை வென்றபோது, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட எதிர்பாராத நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சோகமான சம்பவத்தினால், இந்த ஆண்டு பெங்களூருவில் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இருப்பினும், உரிய பாதுகாப்பு அனுமதிகள் மற்றும் முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஆர்சிபி அணி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 5 போட்டிகளில் விளையாடும் என அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூருவில் போட்டிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்சிபி விளையாட வேண்டிய மீதமுள்ள 2 சொந்த மைதான போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரரான மேத்யூ ஹைடன், குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


