Last Updated:
18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி இலக்கை எட்டியது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது. 61வது லீக் போட்டியான இந்த மேட்சில் டாஸ் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் ரன்களை விறுவிறுவன குவித்தார்கள். இதனால் 10 ஓவர்களிலேயே லக்னோ அணி 100 ரன்கள் கடந்தது.
அணியின் ஸ்கோர் 115 ஆக இருந்தபோது மார்ஷ் 65 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பந்த் 7 ரன்களில் வெளியேறினார். மார்க்ரம் 61 ரன்களும் பூரன் 45 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழந்த லக்னோ அணி 205 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். அணியில் டிராவிஸ் ஹெட் இல்லாத சூழலில் அவருக்கு பதிலாக தொடக்க வீரராக அதர்வா டைடே களமிறங்கினார்.
9 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரியுடன் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து இணைந்த இஷான் கிஷன் – அபிஷேக் சர்மா இணை அற்புதமாக பேட் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 20 பந்துகளில் 6 சிக்ஸர் 4 பவுண்டரி அடித்து அபிஷேக் சர்மா 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இஷான் கிஷன் 28 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார்.
ஹெய்ன்ரிக் கிளாசன் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்த தோல்வியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
May 19, 2025 11:46 PM IST


