Last Updated:
ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக சேஸிங் செய்யப்பட்ட 2 ஆவது பெரிய ஸ்கோர் இதுவாகும்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் 246 ரன்கள் சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சாதனை படைத்துள்ளது. அந்த அணியின் அபிஷேக் சர்மா 141 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் பிரியன்ஷ் ஆர்யா 36 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 42 ரன்களும் எடுத்த அருமையான தொடக்கத்தை கொடுத்தனர்.
கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் தலா 6 சிக்சர் பவுண்டரியுடன் 82 ரன்கள் குவித்தார். நேகல் வதேரா 27 ரன்களும், ஸ்டாய்னிஸ் 34 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 245 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக கடுமையான இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா களம் இறங்கி பஞ்சாப் அணியின் பவுலிங்கை வெளுத்து வாங்கினர்.
37 பந்துகளில் 3 சிக்சர் 9 பவுண்டரியுடன் டிராவிஸ் ஹெட் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 12.2 ஓவர்களில் 171 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தொடர்ந்து சிக்சர் பவுண்டரி விளாசிய அபிஷேக் சர்மா சதத்தை எளிதாக கடந்தார்.
55 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 சிக்சர், 14 பவுண்டரியுடன் 141 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கிளாசன் 21 ரன்களும், இஷான் கிஷன் 9 ரன்களும் சேர்க்க 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சன்ரைசர்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது.
இதையும் படிங்க – IPL 2025 : குஜராத்தை வீழ்த்தியது லக்னோ… மார்க்கம், பூரன் அதிரடி
ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக சேஸிங் செய்யப்பட்ட 2 ஆவது பெரிய ஸ்கோர் இதுவாகும். கடந்த ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி சேஸிங் செய்தது முதல் இடத்தில் உள்ளது.
April 12, 2025 11:39 PM IST


