Last Updated:
விராட் கோலி – தேவ்தத் படிக்கல் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தியது. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினர்.
பிரியன்ஷ் 22 ரன்களும், பிரப்சிம்ரன் 33 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்கள். இருவரின் விக்கெட்டையும் க்ருனல் பாண்ட்யா கைப்பற்றினார்.
கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களும், நேஹல் வதேரா 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜோஷ் இங்லீஷ் 29 ரன்கள் சேர்த்தார். ஷஷாங்க் சிங் 31 ரன்களும், மார்கோ யான்சென் 25 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் பிலிப் சால்ட் 1 ரன் எடுத்திருந்தபோது அர்ஷ்தீப் சிங் வேகத்தில் ஜோஷ் இங்லீஷிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து இணைந்த விராட் கோலி – தேவ்தத் படிக்கல் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தியது. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
தேவ்தத் படிக்கல் 4 சிக்சர் 5 பவுண்டரியுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைச்சதம் கடந்த கோலி 73 ரன்கள் சேர்த்தார். ரஜத் பட்டிதார் 12 ரன்களும், ஜிதேஷ் சர்மா 11 ரன்களும் எடுக்க ஆர்சிபி 18.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
April 20, 2025 6:59 PM IST


