Last Updated:
லக்னோவுக்கு எதிரான மேட்ச்சில் ராஜஸ்தான் அணி 178 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியின்போது மேட்ச் ஃபிக்சிங் நடந்திருக்கலாம் என்று கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் சந்தேகம் எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகளும் குறைந்தது 7 போட்டிகளில் விளையாடி முடித்துள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டி கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 அவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 178 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இது குறித்து சந்தேகம் எழுப்பிய ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகி ஜெய்தீப் பிஹானி என்பவர், “இந்த போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதா? இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வி அடைந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம்” என்று கூறியிருந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ராஜஸ்தான் அணி நிர்வாகம், இது சம்பந்தமாக வதந்திகளை ஏற்படுத்திய ஜெய்தீப் பிஹானி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஜஸ்தான் முதல்வர், விளையாட்டு துறை அமைச்சர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்துள்ளது. “அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு எந்த விதமான ஆதாரம் கிடையாது” என்று ராஜஸ்தான் அணி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
April 22, 2025 2:33 PM IST


