Last Updated:
அறிமுக போட்டியில் இந்த ஸ்கோர் மிகவும் சிறப்பான ஒன்று என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.
14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகியுள்ள வைபவ் சூர்யவன்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வைபவ் சூர்யவன்சி அறிமுகமானார்.
தனது முதல் போட்டியில் முதல் பந்திலையே அவர் சிக்ஸரை விளாசினார். அதுவும் அனுபவமிக்க ஷர்துல் தாகூர் பந்தில் இவர் சிக்சர் அடித்தது பாராட்டுகளை குவித்து வருகிறது. 20 பந்துகளை எதிர்கொண்ட அவர் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அறிமுக போட்டியில் இந்த ஸ்கோர் மிகவும் சிறப்பான ஒன்று என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள். சூர்யவன்சி ஆடும் விதம் குறித்து நேற்று சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. இவர் யுவராஜ் சிங்கை போன்று பேட்டை சுழற்றுவதாகவும் பிரையன் லாரா போன்று மிக வேகமாக பந்தை அடிப்பதாகவும் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் சூர்யவன்சியின் பயிற்சியாளர் மணிஷ் ஓஜா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, ”சூர்யவன்சிக்கு பீட்சா சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் கிரிக்கெட்டிற்காக அவர் அதனை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறினேன். அவரும் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்தார். இப்போது அவர் மட்டன் சாப்பிட மாட்டார்.
முன்பு நாங்கள் மட்டன் எவ்வளவு கொடுத்தாலும் அதை முழுமையாக சாப்பிட்டு விடுவார். அதனால் தான் அவர் சற்று குண்டான தோற்றத்தில் இருக்கிறார். அவருக்கு கிரிக்கெட் வாழ்வில் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. அவரால் மிகப் பெரிய போட்டிகளை வெல்ல முடியும் என்பதை நான் உங்களுக்கு உறுதியாக கூறுகிறேன்.
பேட்டிங் செய்யும்போது அவர் பயப்படவே மாட்டார். அவர் பிரையன் லாராவும் யுவராஜ் சிங்கும் கலந்த கலவை. அறிமுக போட்டியில் அவர் சிறப்பான முறையில் விளையாடியது திருப்தி அளிக்கிறது. அவர் விளையாடுவதற்கு முன்பாக ராகுல் டிராவிட்டும், ராஜஸ்தான் அணி நிர்வாகமும் எனக்கு ஃபோனில் தகவல் சொன்னார்கள்.
அதைக் கேட்டபோது எனக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தாலும் பதட்டமும் காணப்பட்டது. நான் சூர்யவன்சியிடம், “அமைதியாக இரு பதட்டப்படாதே. எப்போதும் விளையாடுவாயே அதே போன்று விளையாடு” என்று சொன்னேன். பந்து சரியாக கிடைத்தால் சிக்சர் அடிக்க தயங்காதே என்று கூறினேன்” என்று தெரிவித்துள்ளார்.
April 20, 2025 6:28 PM IST


