Last Updated:
விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகத்தில் தோனி செயல்பட்டாலும், வெற்றிக்காக அதிக ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் அவரால் முன்பை போல பேட்டிங் செய்ய முடியவில்லை.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவிப்பார் என தகவல்கள் பரவிய நிலையில், அது பற்றிய கேள்வி ஒன்றுக்கு அவரே பதில் அளித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள ரசிகர்கள் சிலர், கேப்டன் ருதுராஜை மாற்ற வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்த தொடரில் தோனி மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்தனர். ஆனால் அதற்கு மாற்றமாக தோனியின் பேட்டிங் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமையவில்லை. விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகத்தில் தோனி செயல்பட்டாலும், வெற்றிக்காக அதிக ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் அவரால் முன்பை போல பேட்டிங் செய்ய முடியவில்லை.
43 வயதாகும் தோனி நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் பரவியுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரிடம் ஓய்வு அறிவிப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு தோனி அளித்த பதிலில் கூறியதாவது-
ஆண்டுக்கு ஒருமுறை நான் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறேன். எனக்கு 43 வயதாகிறது. இந்த ஐபிஎல் தொடர் முடியும்போது ஜூலை மாதத்தில் எனக்கு 44 வயது ஆகும். அடுத்த ஐபிஎல் தொடரை விளையாடுவதற்கு 10 மாத காலம் அவகாசம் உள்ளது.
நான் கூடுதலாக இன்னும் ஒரு ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை என்னுடைய உடல் நிலைதான் முடிவு செய்யுமே தவிர, என்னால் அதனை தீர்மானிக்க முடியாது என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில் தோனி பிட்னஸ் ஆக இருந்தால் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
April 06, 2025 5:50 PM IST


