Last Updated:
டெல்லி அணிக்கு எதிரான மேட்சில் ஒரே ஒரு வீரர் மட்டும் அதிரடியாக ரன் சேர்த்திருந்தால் ரிசல்ட் மாறி இருக்கும் என்று கூறப்படுகிறது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த 3 போட்டிகளில் தோல்வி அடைந்து பாயிண்ட்ஸ் டேபிளில் 9-ஆவது இடத்துக்கு பின் தங்கி உள்ளது. சென்னை அணி தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த சூழலில், அடுத்து நாளை நடைபெற உள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியில் முக்கிய வீரர்கள் நீக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை அணியை பொறுத்தளவில், கலில் அகமது, நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக பந்துவீசி வருகின்றனர். ஏதாவது ஒரு பவுலர் மட்டுமே ரன்களை அதிகம் வாரி கொடுத்து விடுகிறார்.
டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சென்னை அணியின் முகேஷ் சவுத்ரி 4 ஓவர்கள் வீசி 50 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அவரை தவிர்த்து மற்ற வீரர்கள் அற்புதமாக பந்துவீசி எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி வருகின்றனர். இருப்பினும், பேட்டிங் தான் சென்னை அணிக்கு கவலை அளிப்பதாக உள்ளது.
எந்த ஒரு சென்னை அணியின் பேட்ஸ்மேனும் தொடர்ச்சியாக ரன்கள் குவிக்க தவறி வருகின்றனர். டெல்லி அணிக்கு எதிரான மேட்சில் ஒரே ஒரு வீரர் மட்டும் அதிரடியாக ரன் சேர்த்திருந்தால் ரிசல்ட் மாறி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பௌலிங்கை விடவும் பேட்டிங் டிபார்ட்மெண்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை சென்னை அணி உணர்ந்துள்ளது.
இதனால் அடுத்த மேட்ச்சில், அதாவது நாளை பஞ்சாபுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த போட்டியில் ரன்களை அள்ளிக் கொடுத்த முகேஷ் சவுத்ரி நாளைய போட்டியில் இடம் பெற வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இவர்களுக்கு பதிலாக ஆன்ட்ரே சித்தார்த் மற்றும் அன்ஷூல் கம்போஜ் ஆகியோர் அணியில் சேர்க்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த போட்டியில் விஜய் சங்கர் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 54 பந்துகளை எதிர் கொண்ட அவர் ஒரு நாள் போட்டியை போன்று விளையாடி 69 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இவரது இடத்தில் நன்றாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருந்தாலே ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்று இருக்கும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதனால் விஜய் சங்கருக்கு பதிலாக மீண்டும் ராகுல் திருவாதி களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஹாட்ரிக் தோல்வி அடைந்திருக்கும் சூழலில் நாளைய போட்டியில் இத்தகைய அதிரடி மாற்றங்களை சென்னை அணியில் எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
April 07, 2025 6:39 PM IST


