Last Updated:
ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளில் உள்ள எல்லோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் தரம்சாலாவில் நடைபெற்று வந்த பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வீரர்களை பத்திரமாக டெல்லி கொண்டு வருவதற்கு வந்தே பாரத் ரயிலை பிசிசிஐ அனுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பகல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய ராணுவம் நேற்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடியை பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளது. இன்றைக்கும் பதற்றம் நீடித்து வரும் நிலையில் எல்லையோர மாநிலங்களான ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளில் உள்ள எல்லோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இமாச்சலப் பிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே விளக்குகள் திடீரென அணைக்கப்பட்டன.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு நடந்ததாக முதலில் கூறப்பட்டாலும் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு செய்யப்பட்டது என தகவல்கள் வெளிவந்தன.
அதனை தொடர்ந்து போட்டியும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வீரர்கள் மற்றும் பணியாளர்கள் பத்திரமாக ஹோட்டல் அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்கள் பாதுகாப்பான சூழலில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை டெல்லி கொண்டு வருவதற்கு பிசிசிஐ முயற்சி மேற்கொண்டு வருகிறது.
விமானம் மூலமாக வீரர்களை டெல்லிக்கு கொண்டு வருவது பாதுகாப்பானதாக இருக்காது என கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து வீரர்களை டெல்லி கொண்டு வருவதற்கு சிறப்பு வந்தே பாரத் ரயிலை பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தரம்சாலாவுக்கு அருகே உனா என்ற ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து ரயில் மூலமாக வீரர்கள் டெல்லிக்கு கொண்டு வரப்படுவார்கள் என்று பிசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
May 08, 2025 11:35 PM IST


