Last Updated:
இன்றைய ஆட்டத்தில் கோலி 53 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் தொடரில் 8500 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்துவார்
சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெற உள்ள போட்டியில் 5 ரெக்கார்டுகளை முறியடிப்பதற்கு விராட் கோலிக்கு வாய்ப்பு உள்ளது. அதனை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 52-ஆவது லீக் ஆட்டமாக சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டி இரவு 7:30 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் 2இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணி முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.
ஆர்சிபி அணி இந்த முறை பத்து போட்டிகளில் 7 இல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவதுடன் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் ஆர்சிபி உறுதிப்படுத்தும். இதற்கிடையே இன்றைய ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்படும். இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி 5 ரெக்கார்டுகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
இன்றைய ஆட்டத்தில் கோலி 53 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் தொடரில் 8500 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்துவார். 10 ரன்கள் எடுத்தால் இந்தியாவில் நடந்த டி20 போட்டிகளில் 9,500 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்துவார்.
இன்றைய ஆட்டத்தில் 6 பவுண்டரி அடித்தால் ஐபிஎல் தொடரில் 750 ஃபோர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும், 1 சிக்சர் அடித்தால் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் 300 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும், 7 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிராக 50 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ஏற்படுத்துவார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு பெங்களூரில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய கடைசி போட்டியில் பெங்களூரு 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்ற நிலையில் அதற்கு சென்னை இன்று பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


