Last Updated:
IPL 2025 | தரம்சாலாவில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே விளக்குகள் திடீரென அணைக்கப்பட்டன. பின்னர் போர் பதற்றம் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய ராணுவம் நேற்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடியை பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளது. எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் எல்லையோர மாநிலங்களான ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளில் உள்ள எல்லோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இமாச்சலப் பிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே விளக்குகள் திடீரென அணைக்கப்பட்டன. பின்னர் போர் பதற்றம் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 58 போட்டிகள் முடிந்த நிலையில் மீதமுள்ள போட்டிகளை ஒத்திவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும், தேதி குறிப்பிடாமல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வீரர்களுக்கான பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த சூழலில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது சரியாக இருக்காது என்பதாலும் இந்த முடிவை பிசிசிஐ எடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
நிலைமை சரியான பின்னர் போட்டிகளை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த முடிவு தொடர்பாக பிசிசிஐயின் அதிகாரபூர்வ பக்கங்களில் எதுவும் உறுதிசெய்யப்படவில்லை.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
May 09, 2025 12:26 PM IST


