Last Updated:
CSK நிர்வாகம் அனைத்து வீரர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த சிறிய அளவிலான முயற்சி மிகப் பெரிய மாற்றத்தை கொடுக்கிறது
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆர்சிபி அணி ஒருமுறை கூட வெல்லாததற்கான காரணம் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ள கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 17 சீசன் முடிந்துள்ளன. 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதனையொட்டி ஐபிஎல் நிர்வாகம் படு பிஸியாக வேலைகளை கவனித்து வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. அதற்கு மறுநாள் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.
இதுவரை 17 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் ஒருமுறை கூட ஆர்சிபி அணி கோப்பையை வென்றது கிடையாது. இத்தனைக்கும் அந்த அணியில் முக்கிய வீரரான விராட் கோலி தொடர்ந்து 17 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் ஆர்சிபி கோப்பையை வெல்லாததற்கான காரணம் குறித்து அந்த அணியில் விளையாடிய முன்னாள் வீரர் சதாப் ஜகாதி கருத்து தெரிவித்துள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
ஜாகாதி கூறியதாவது, “ஆர்சிபி நிர்வாகம் 2 அல்லது 3 வீரர்களிடம் மட்டுமே கவனம் செலுத்தும். இந்த வியூகம் இதுவரைக்கும் பெங்களூரு அணிக்கு பலம் அளிக்கவில்லை. பெரும்பாலும் பெங்களூரு அணி விராட் கோலி மற்றும் வெளிநாட்டு வீரர்களையே அதிகம் நம்புகிறது. அணி என்ற அளவில் அனைத்து வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் முற்றிலும் மாறுபடுகிறது. கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு. நீங்கள் கோப்பைகளை வெல்ல வேண்டும் என்றால் வீரர்கள் குழுவாக விளையாட வேண்டும். இரண்டு மூன்று வீரர்களை மட்டுமே நம்பி கோப்பையை வெல்ல முடியாது. சென்னை அணியை பார்த்தால் உள்ளூர் வீரர்கள் வலிமையாக உள்ளனர். மிதமாக விளையாடக்கூடிய வெளிநாட்டு வீரர்களும் அந்த அணியில் இருக்கிறார்கள். இந்த காம்பினேஷன் மிகவும் முக்கியம்.
நான் ஆர்சிபியில் விளையாடிய போது 2-3 வீரர்களுக்கு மட்டுமே அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்தது. இந்த விஷயத்தில் சென்னை அணி நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. அனைத்து வீரர்களுக்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த சிறிய அளவிலான முயற்சி மிகப் பெரிய மாற்றத்தை கொடுக்கிறது” என்று தெரிவித்தார். 2014ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் பெங்களூரு அணியால் வாங்கப்பட்ட சதாப் ஜகாத் அந்த அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார்.
March 18, 2025 7:47 PM IST


