Last Updated:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெளியேறியுள்ள நிலையில் இந்த போட்டியில் ஆர்.சி.பி வெற்றி பெற்றால் முதல் இடத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் போட்டி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தற்போது வரை 3 அணிகள் தகுதி பெற்றுள்ளன. குஜராத் டைட்டன்ஸ், ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்னும் ஒரே ஒரு அணி தகுதி பெற வேண்டி உள்ளது.
அந்த இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளை பெற்றுள்ளது. டெல்லி கேப்பிட்டல் 13 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
இவ்விரு அணிகளும் அடுத்தடுத்து மோதும் ஆட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. நாளை 2 அணிகளும் மோதும் போட்டி வாழ்வா? சாவா? என்கிற வகையில் அமையும். அதன் பின்னர் பஞ்சாப் அணி டெல்லியுடன் வரும் சனிக்கிழமை விளையாடுகிறது.
வரும் திங்கள் அன்று மும்பை அணி பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. இந்த மூன்று ஆட்டங்களுமே கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளன. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் டெல்லியை அனுப்புவதா அல்லது மும்பையை அனுப்புவதா என்பது தற்போது பஞ்சாப் அணியின் கையில் உள்ளது.
வெளியேறிய அணிகளை பொறுத்த அளவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத், லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகள் தொடரை விட்டு வெளியேறியுள்ளன. இந்நிலையில் வரும் வெள்ளியன்று பெங்களூரு மைதானத்தில் நடைபெறவிருந்த ஆர்.சி.பி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக லக்னோவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இவ்விரு அணிகளில் ஆர்.சி.பி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெளியேறியுள்ள நிலையில் இந்த போட்டியில் ஆர்.சி.பி வெற்றி பெற்றால் முதல் இடத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.


