– உள்நாட்டு, வெளிநாட்டு தொழில்முனைவோர், தயாரிப்புகள், தொழில் முதலீடுகளுக்கு வாய்ப்பு
கைத்தொழில் அமைச்சு மற்றும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) இணைந்து ஏற்பாடு செய்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர் மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தும் “Industry EXPO 2024” சர்வதேச கைத்தொழில் கண்காட்சி இன்று (22) 4ஆவது நாளாக தொடர்கிறது.
BMICH இல் இடம்பெறும் இக்கண்காட்சியின் நேற்றைய (21) மூன்றாம் நாள் நிகழ்வு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் ஆரம்பமானது.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் கண்காட்சியின் மூன்றாவது நாளான நேற்று, ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.
முதலீடு மற்றும் வணிக விவாதங்கள், வடிவமைப்பு மற்றும் பேஷன் கண்காட்சிகள், வணிக மாநாடுகள், one stop shop உள்ளிட்ட அம்சங்கள் இந்த சர்வதேச தொழில் கண்காட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இன்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, 2022 இல் இலங்கையின் பொருளாதார பணவீக்க விகிதம் 70% ஆக இருந்த போதிலும், தற்போது நாடு ஓரளவு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதாகவும், இந்த ஸ்திரத்தன்மையை தொடர, நாடு நிலையான பொருளாதார கொள்கையில் செல்ல வேண்டும் என்றார்.
அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவிக்கையில், இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையைப் பார்த்தால், ஒரு நாடு என்ற ரீதியில் நாம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளோம், நாட்டின் பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றுவதற்கு, எமக்கு வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு சந்தைகள் தேவை.
கண்காட்சியின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நாட்டின் அனைத்து உற்பத்திகளின் இலக்குகளும் போட்டித் தன்மையான வெளிநாட்டு சந்தையாக இருக்க வேண்டும் என்பதோடு, உற்பத்தி கைத்தொழில்களில் பெறுமதி சேர்க்கப்படுவது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றார். அத்துடன், சேவைத் துறையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது என மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரண, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், ஆளுநர்கள், கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க, மேலதிக செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, தலைவர் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை கலாநிதி சாரங்க அழகப்பெரும, அரச அதிகாரிகள், தொழில் முயற்சியாளர்கள், கைத்தொழில்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


