உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா. அதன்பிறகும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததாகக் கூறி இந்திய பொருட்களுக்கு 50 சதவிகித வரி விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை 2025-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா நிறுத்திவிடும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரி விதித்தது. ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்க அனுமதிக்கும் தொடர்புடைய சட்டத்தையும் அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய பொருட்கள் மீதான வரியை மேலும் உயர்த்துவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக நேற்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “மோடி மிக நல்ல மனிதர். அவருக்கு நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம் என்பதையும் அவர் அறிவார்.
எனவே, இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதைத் தொடர்ந்தால், குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்தால், இந்தியா மீது விதிக்கப்படும் வரிகளை இன்னும் வேகமாகவும், விரைவாகவும் என்னால் அதிகரிக்க முடியும். என்னுடைய இந்த நடவடிக்கை அவர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும்… நான் இன்னொன்றையும் உங்களுக்கு சொல்கிறேன்… ரஷ்யப் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது” என இந்தியாவை மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.

அமெரிக்கா இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி இலக்கு நாடாகும். ஏப்ரல் மற்றும் நவம்பர் 2025-க்கு இடையில், இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 50.8 பில்லியன் டாலராக இருந்தது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய வர்த்தகப் புள்ளிவிவரங்களின்படி, வரிகள் விதிக்கப்பட்ட உடனேயே, அதாவது செப்டம்பரில் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்ட போதிலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி சமநிலை வகிக்கிறது.

